Pages

Friday, 7 October 2016

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கப்போகிறீர்களா? வீட்டின் விலையில் தொடங்கி வில்லங்கம், பெயர் மாற்றம் உட்பட எல்லாச் சந்தேகங்களையும் கட்டுநரிடம் (பில்டர்) பேசித் தீர்த்துக் கொண்டீர்களா? கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றிப் பேசினீர்களா? அந்தச் சான்றிதழைக் கொடுப்பதாகக் கூறினாரா கட்டுநர்? ஒரு கட்டுநர் இந்தச் சான்றிதழை வாங்கி வைத்திருந்தால் கட்டுமானத்தில் விதிமீறல்கள் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்றால் என்ன?
ஒரு கட்டுமானம் நடைபெறும்போது உள்ளாட்சி அமைப்பினர், சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அதிகாரிகள் கட்டுமானத்தை ஆய்வு செய்வார்கள். கட்டுமானம் நடைபெறும்போது மட்டுமல்லாமல், கட்டுமானம் முழுமையாக முடிந்த பிறகும் ஆய்வு செய்வார்கள். அதிகாரிகள் தாமாக வந்து ஆய்வு செய்ய மாட்டார்கள். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) கேட்டு விண்ணப்பிக்கும்போது வந்து ஆய்வு செய்வார்கள். கட்டுமானத்துக்கான திட்டத்தை வைத்துகொண்டு திட்ட அனுமதியின் படி வீடு அல்லது அடுக்குமாடி வீடு கட்டப்பட்டிருக்கிறதா என்றும் அங்குலம் அங்குலமாக ஆராய்வார்கள். திட்ட அனுமதியின் படியும், விதிமீறல் இல்லாமலும் கட்டப்பட்டிருந்தால் அளிக்கும் தடையில்லாச் சான்றிதழ்தான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) .
கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டின் அவசியம் என்ன?
புதிய வீட்டுக்குத் தேவையான பிற வசதிகளைச் செய்ய இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட் மிகவும் முக்கியம். அதாவது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை சம்பந்தப்பட்ட துறையில் சமர்பிப்பது முக்கியம். எனவே வீடுகளை விற்கும் கட்டுநர் இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை வீடு வாங்குபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கட்டுநர் தரவில்லை என்றாலோ, தருவதாக இழுத்தடித்துக் கொண்டிருந்தாலோ வீடு கட்டுமானத்தில் விதிமீறல்கள் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளலாம். எந்த விதிமுறை மீறலும் இல்லை என்றால் கட்டுநர் உடனே இந்தச் சான்றிதழைக் கொடுத்துவிடுவார்.
எப்படிப் பெறுவது இந்தச் சான்றிதழை?
ஒருவேளை புதிதாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லோரும் வீட்டில் குடியேறிய பிறகும் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டைக் கட்டுநர் தரவில்லை என்றால், வீடுகளில் குடியிருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பைத் தொடங்கி உள்ளாட்சி அமைப்பிடம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். சாதாரணக் கட்டுமானமாக இருந்தால் அதற்கு இந்தச் சான்றிதழ் தேவையில்லை. புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டிய கட்டுமானம், அடுக்குமாடிக் கட்டுமானங்கள், உயர்ரக அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிலகக் கட்டுமானங்கள், 15.25 மீட்டர் அளவுக்கு மேல் உள்ள கட்டுமானங்களுக்கு சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-யிலிருந்து கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பெற வேண்டும்.
சான்றிதழுக்கு என்ன விதிகள்?
உதாரணமாக எந்த ஒரு திட்டக் கட்டுமானமாக இருந்தாலும் அதன் எஃப்.எஸ்.ஐ. விகித அளவுகளின்படிதான் கட்டவேண்டும் என்பது விதி. அதாவது பிரதான சாலை 100 அடியாக இருந்தால் 20 அடி அல்லது 25 அடி வீட்டைச் சுற்றிச் செட்பே விட வேண்டும்.
60 அடியாக இருந்தால் 15 அடி செட்பேக்கும், 30 அடியாக இருந்தால் 10 அடி செட்பேக்கும் விட்டு வீடு கட்ட வேண்டும். தமிழகத்தில் எஃப்.எஸ்.ஐ. 1.5 விகிதத்தில்தான் கட்ட வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உயரம் மேலே செல்லச் செல்ல மாடிப்படி, போர்டிகோ போன்ற பகுதிகளைச் சில கட்டுநர்கள் விதிகளை மீறிக் கட்டிடத்திற்கு வெளியே கட்டிவிடுவார்கள்.
இதையெல்லாம் ஆய்வு செய்யும்போது அதிகாரிகள் அளந்து பார்ப்பார்கள். விதி மீறல் இல்லாமல் கட்டுமானத்தைக் கட்டினால் சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்க்காது. விதி மீறப்பட்டிருக்கும் நிலையில் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate)தர அதிகாரிகள் மறுத்துவிடுவார்கள். இதற்காக மட்டுமல்ல, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதன் உறுதித்தன்மைக்குச் சில விஷயங்கள் முக்கியம். கட்டிடப் பணி நடக்கும்போது, ஒவ்வொரு கட்டித்திலும், பிளான்படி கட்டப்படுகிறதா, கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்கிறதா என சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அதிகாரிகள் பரிசோதித்துச் சான்றளிப்பார்கள். எனவேதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) முக்கியத்துவம் பெறுகிறது.
அதேசமயம் பெரிய குடியிருப்புகளுக்கு வெறும் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) மட்டுமே போதாது. அஸ்திவாரம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் சான்றிதழ் வாங்குகிறார்களா எனப் பார்ப்பதும் நல்லது. வீடு என்பது மிகப் பெரிய கனவு; கஷ்டப்பட்டு உழைத்து, இ.எம்.ஐ. கட்டி வாங்கும் வீட்டில் விதிமீறலிருந்து; அதன் காரணமாகச் சிக்கல்கள் எழுந்தால் புது வீடு தந்த சந்தோஷம் துன்பத்தையும் தந்துவிடும். எனவே வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றி கேள்வி எழுப்பி முறையாக வாங்கி வைத்துக்கொள்வதே நல்லது.

ிழ் ஹிந்து நிழ்

Thursday, 6 October 2016

அடுக்குமாடி குடியிருப்புகள்: நன்மைகள் என்னென்ன?

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவே உள்ளன. மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்பதை உறுதிபடக் கூறலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்குச் சான்று.
நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூகக் கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகிவிட்டது. அதனால் சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மாத வருமானத்தில் வாழ்பவர்களும், தொழில் முனைவோரும் இதனை சிறந்த முதலீடுகளாகப் பார்கின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பு தரும் பாதுகாப்பு
நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சவுகர்யங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப் பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு, சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம்தான். அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய் கிடைக்கின்றன.
உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதது பாதுகாப்பு. அது அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர் நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றனர். அதனால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன.
மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கெனப் பூங்காவும், வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிச் சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் திகழ்கின்றன.
வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெறச் செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகுபடுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டுச் செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய்க் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
அடுக்குமாடி வீடுகளின் உள்ளமைப்பில் சின்னச் சின்ன சங்கதிகளைச் சரிபார்த்தால் மிகச் சிறந்ததாக உங்கள் வீட்டை மாற்றிவிட முடியும். வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாகத் தோன்றும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றைத் தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடுகூட சிறிது விசாலமாய்த் தெரியும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்ட வல்லுநர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்துக்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். அடுக்குமாடிக் குயிருப்பின் மாடித் தளங்கள் அமைக்க அனுமதிபெறப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பது மட்டும் முயக்கியமல்ல. அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.
இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..
“இது மாடி வீடு…/ அட கோயில் கொஞ்சம் போரடித்தால்/தெய்வம் வந்து வாழும் வீடு...”
வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

Sunday, 2 October 2016

அடுக்குமாடிக் குடியிருப்பின் அனுபவங்கள் என்னென்ன?

(நமது குடியிருப்பு சிறிய ஒன்றுதான். ஆனால் பெரிய குடியிருப்புகளில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டால்தான் நமது குடியிருப்பின் அருமை நமக்கு புரியும் என்பதற்காக இங்கு இப்பதிவு)

என் உறவினர் ஒருவர் மிக அண்மையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குக் குடிபெயர்ந்தார். தனி வீட்டில் குடியிருந்தவருக்கு, அடுக்குமாடிக் குடியிருப்பு அனுபவம் புதுமையாகத்தான் இருந்தது. இரண்டாம் நாளே மின் பொருட்களைப் பொருத்தவும், படம் மாட்டவும் சுவரில் துளை போட வேண்டியிருந்தது. \
அடுத்த தளக்காரர் உடனே வந்து, “சார் இந்த பிளாட்களில் இரவு ஏழு மணிக்கு மேல் இது போன்ற வேலைகள் மேற்கொள்ளக் கூடாது” என்று நிதானமாகச் சொன்னார். மேலே குறிப்பிட்டது போல, பல விதிகளும் நியதிகளும் எல்லா அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இருக்கும். முக்கியமான சில அம்சங்கள்:
# ஒவ்வொரு தள வரிசைக்கும் தனி அமைப்பு இருக்கும். இது பதிவுசெய்யப்படாமல்கூட இருக்கலாம். பராமரிப்புக்கென மாதம் ரூபாய் ஆயிரத்திலிருந்து ஆயிரத்தி ஐநூறு வரை செலுத்த வேண்டிவரும். மின் தூக்கி பராமரிப்பு, காவலாளி ஊதியம், பிற சிறு செலவுகளுக்காக இத்தகைய தொகை வசூலிக்கப்படுகிறது.
# தள வரிசைக்குள் குடிபுகுந்துவிட்டால், உரிமையாளர், வாடகைதாரர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் தளங்களில் வசிப்பவர்களே. குறைந்தபட்சம் 80 சதவிகிதம் அளவுக்கு பிளாட்களில் மக்கள் குடிவந்தவுடன்தான் காவலாளி நியமிக்கப்படுவார். தளத்தைக் காண்பித்து விற்பதோ, குடித்தனக்காரரை வைப்பதோ எல்லாம் ஒப்பந்தக்காரரின் பொறுப்பு,
# குடியிருப்புக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்தப்படும் இதற்காக வருடா வருடம் கூட்டம் போட்டு, பொருளாளர், செயலாளர், தலைவர் அனைவரையும் தேர்ந்தெடுப்பது அவசியம். அது போன்ற கூட்டம் நிகழ்ந்தால்தான் பல சிக்கல்களைப் பேசி முடித்து, தீர்வு காண இயலும்.
# கீழ்த் தள வரிசையில் குடியிருப்பவர், மூன்றாம் மாடியிலிருப்பவர் எல்லாருக்குமே அவ்வப்போது சிக்கல்கள் எழும். மின் தூக்கி நின்றுவிட்டால், மாடியிலிருப்பவர் சிரமப்படுவார். கழிவு நீர்ப் பாதையில் கோளாறு ஏற்பட்டால், கீழ்த்தள வரிசைக்காரருக்குத்தான் பிரச்சினை மிகுதி.
# தனி வீடு என்றால் உங்கள் விருப்பம் போல் பாடலாம். சத்தம் போடலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் இதெல்லாம் முடியாது. ஏதாவது பஜனையோ அல்லது பாட்டு பாடினாலோ இயன்றவரை பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்குத் தொந்தரவு தரக் கூடாது (அயல்நாட்டில் என்றால் இதுபோன்ற செயல்களுக்கு வழக்கே தொடுத்து விடுவார்கள்).
# மின்சாரப் பழுது வேலை என்றால், கூடுதல் கண்காணிப்பும் எச்சரிக்கையும் தேவை. டிவியைப் பதிப்பது, பழுதடைந்த குளிர்சாதனக் கருவியைச் சரி செய்வது போன்ற பணிகளுக்குக் கூடுமானவரை உங்களுக்கு நன்கு தெரிந்த, பழக்கப்பட்ட பணியாளரையே அழைத்துச் செய்யச் சொல்லுங்கள். ஏனென்றால் இரு குடியிருப்புகளுக்கான சுவர் பொதுவானது என்பதால் எச்சரிக்கை தேவை.
# என் உறவினர் குடியிருந்த தளத்தில், அந்தக் குடியிருப்பின் செயலாளர், “உங்கள் பிளாட் ஏஸியிலிருந்து நீர் ஒழுகுகிறது. சரி பண்ணுங்கள்” என்றார். உறவினர் மெக்கானிக்கை அழைத்துப் பார்க்க, அதில் ஏதும் பழுது இல்லை என்று தெரிந்தது. கடைசியில், குடியிருப்பில் இருக்கும் பிளம்பரை அழைத்துவந்து பார்த்ததில், நீர்க் கசிவுக்கு வேறு காரணம் இருப்பது கண்டுபிடித்து சரி செய்தார்கள். இதைக் குறிப்பிடக் காரணம், செயலாளர் மேம்போக்காகத் தெரிவிப்பதை எல்லாம் மிகச் சரி என ஏற்க வேண்டியதில்லை.
# குடியிருப்பு சங்கத்தின் விதிகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள். வாசற்கதவைப் பூட்டுகிற நேரம், சில தென்னை மரங்கள் இருந்தால், பறிக்கப்படுகிற காய்களைப் பங்கு வைப்பது… இதுபோல் சின்ன விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது நலம். (50, 100 பிளாட்கள் இருக்கிற இடம் என்றால், அங்குள்ள பிரச்சினையே தனி)
# கார் நிறுத்த இடத்தைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தள வரிசை எண்ணுக்கும் தனி நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது காலியாக இருந்தால்கூட, வேறு வாகனங்கள் நிறுத்தக் கூடாது.
# தளங்களில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வண்ணம் பூசுவார்கள். அதுபோல் நடந்தால், ஒத்துழைப்பு தர வேண்டும். குடித்தனக்காரர் எனில் உரிமையாளரிடம் அனுமதி கேட்டு சேர்ந்துகொள்ளலாம். (வெளியே மட்டும்தான்; உள்ளே வண்ணம் பூசுவது தனித் தனி நபரைப் பொறுத்தது.)
தனி வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு இரண்டிலும் சாதகமான, பாதகமான அம்சங்கள் உள்ளன. வெவ்வேறு இன, மதக் கலாச்சாரங்களில் பங்கு பெறும் வாய்ப்பு, பாதுகாப்பு போன்ற சில அம்சங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மட்டுமே சாத்தியம். ஓரளவு மனதைத் தளர்த்திக் கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் உண்டாக்கிக்கொள்வது அவசியம்.

Saturday, 1 October 2016

அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கம் அவசியமா?

புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்குக் கைகொடுப்பது அடுக்குமாடி வீடுகள்தான். தனி வீட்டில் இருப்பதற்கும் அடுக்குமாடி வீட்டில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுக்குமாடி வீட்டுக்குள் எந்த பராமரிப்பையும் வீட்டு உரிமையாளரால் செய்துவிட முடியும். ஆனால், வெளிப்புறங்களில் சில பணிகளை தனியாகச் செய்துவிட முடியாது. குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்துதான் செய்ய முடியும்.
குறிப்பாக அடுக்குமாடிக் கட்டிடங்களில் வெளிப்புறப் பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் யாரும் தனித்துச் செயல்பட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்து சொல்வார்கள். செலவு என்றாலும் பெரு மூச்சு விடுவார்கள். அனைவரும் ஒத்துழைத்தால்தான் பணிகள் நடக்கும் என்பதைப் பலரும் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செல்வதைத் தடுக்க அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் அமைப்பது அவசியம். இப்படி ஓர் அமைப்பு இருந்தால் மட்டுமே குடியிருப்புகளில் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ள முடியும்.
ஆனால், பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சங்கம் என்பது கிடையவே கிடையாது. பிரச்சினை வரும்போது சங்கம் அமைக்கலாம் என்று பேசுவார்கள். ஒவ்வொருவரும் ஒரு தொகையை வங்கியில் டெபாசிட் செய்து பராமரிப்பு பணிகளைச் செய்யலாம் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் செய்ய மாட்டார்கள். உண்மையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்­றில் இரண்டு பங்கு வீடு­கள் விற்கப்பட்டுவிட்டால் சங்கம் அமைக்கப்பட வேண்டும். எல்லா வீடுகளும் விற்பனையாகிவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் சங்கம் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், அடுக்குமாடி வீடுகளில் சங்கம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு வீட்டு உரிமையாளர்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். சென்னையில் சென்ற ஆண்டு வந்த வெள்ளத்துக்குப் பிறகு பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், செலவை பகிர்வதிலும், பராமரிப்புக்கு வேலையாட்களைப் பிடிப்பது வரை குடியிருப்பில் இருந்த ஒவ்வொருவரும் முரண்பட்டு நின்றதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது. சங்கம் இருந்தால், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் செயல்பட வழிவகுத்திருக்கும்.
சரி, எப்போது வேண்டுமானாலும் சங்கம் அமைக்க முடியுமா? எப்போது வேண்டுமானாலும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சங்கம் அமைக்கலாம். இதனால் பிரச்சினை ஒன்றும் இல்லை. உங்கள் பகுதிக்குட்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி நடைமுறைகளின்படி அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தை அமைக்கலாம். புதிதாக வீடு வாங்குவோர், கட்டுநரிடம் சொல்லி அவர் மூலமாகவே புதியவர்களை அரவணைத்து வீட்டு நலச் சங்கம் அமைக்கலாம்.
பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே சங்கம் அமைக்கப்படுவதாக நினைக்கத் தேவையில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் பக்கத்து பக்கத்து அடுக்குமாடிகளுக்கு இடைவெளி விடாமல் விதிமுறைகளுக்கு மாறாகக்கூட அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் மூலமாகவே இதை அணுகலாம். தனித்தனியாக அணுகுவது சிரமமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

Monday, 26 September 2016

என்ன சொல்கிறது அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்?

கல்வி, வேலை வாய்ப்புக்காகப் பெரு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் காலம் இது. இதன் காரணமாக நகரங்களில் வீட்டுத் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ப பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பலரது சொந்த வீடு கனவையும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் நனவாக்குகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புக்கென ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச் சட்டங்கள் உள்ளன. இங்கேயும்கூட, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் 1994 உள்ளது. அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?
சட்டத்துக்கான காரணம்
தனி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான உரிமையை ஒருவருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. குறிப்பிட்ட கட்டிடத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மாற்றும் வகையிலும் அசையா சொத்தாகவும் இந்தச் சட்டம் காட்டுகிறது.
சட்டத்தின் பயன்பாடு
இந்தச் சட்டமானது ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட விண்ணப்பிக்கத் தொடங்கு வதிலிருந்தே அமலுக்கு வந்துவிடும். ஒரு குறிப்பிட்ட கட்டுமானத்தில் 5 அல்லது அதற்கு மேல் அடுக்குமாடி வீடுகளை 3 தளங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு அமைக்கலாம். கட்டிடத் திட்ட அனுமதியைப் பொறுத்து கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் முறைப்படியான கட்டிடத் திட்ட ஒப்புதலைப் பெற்றுக் கட்டிடத்தைக் கட்ட இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
அடுக்குமாடி மாற்றக்கூடியது
ஒவ்வோர் அடுக்குமாடிக் குடியிருப் பிலும் மனையில் பிரிக்கப்படாத பாகம் இருக்கும். இதேபோல அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லாத் தேவைகளுக்காகவும் வசதிகளும் இருக்கும். அடுக்குமாடிக் குடியிருப்பானது பரம்பரையானதாகவும் மாற்றக்கூடியதாகவும் அசையா சொத்துகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். ஒருவருடைய பிரிக்கப்படாத பாகம் மற்றும் வசதிகளை வேறு ஒருவருக்கு மாற்றி தர முடியும். இதன்படி அடுக்குமாடிக் குடியிருப்பை விற்கலாம், மார்ட்கேஜ் மூலம் அடமானம் வைக்கலாம், குத்தகைக்கு (லீஸ்) விடலாம், பரிசாகக் கொடுக்கலாம். அசையாச் சொத்தை சட்டப்படி விற்க என்ன உரிமைகள் இருக்கின்றனவோ அதே உரிமை அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் உண்டு.
விதிமுறைகள்
ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளருக்கும் பொதுப் பகுதிகளில் பிரிக்கப்படாத பாகம் என்ற தலைப்பில் குறிப்பிட்ட சதவீதப் பகுதி மற்றும் வசதிகள் பற்றி அடுக்குமாடி விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்குமாடி வீட்டு உரிமையாளரும் சட்டப்படி உடன்படிக்கை, நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு உடன்பட வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதைத் தமிழ்நாடு சொசைட்டி சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கம் மூலம் எல்லா வசதிகளையும் பராமரிக்கலாம். பொதுப் பகுதிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த எல்லா உரிமையாளர்களுக்கும் உரிமை உண்டு. என்றாலும் துணை விதிகள் ஒன்றை ஏற்படுத்திப் பொதுவான விஷயங்களை ஆலோசித்து முடிவு செய்யலாம்.
துணை விதிகளின்படி சொத்து நிர்வகிக் கப்பட வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரிக்கப்படாத பாகம் மற்றும் பொதுவான பகுதிகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். இதேபோலப் பொது செலவினங்களை ஒவ்வொரு உரிமை யாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டத்தில் ஐந்து அத்தியாங்கள் உள்ளன. இந்த அத்தியங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் களுக்கென சட்டத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

தமிழ்’ இந்து20-08-2016.

Saturday, 24 September 2016

முன்கூட்டியே செலுத்தப்படும் வீட்டுக் கடன்: குறைவது அசலா, தவணைக் காலமா?

வீட்டுக் கடன் வாங்கினாலும் பலரும் முழு கால அவகாசத்திலும் தவணைத் தொகையைச் செலுத்த விரும்புவதில்லை. முன்கூட்டியே கடனை அடைக்கவே விரும்புகிறார்கள். முன்கூட்டியே வீட்டுக் கடனை அடைப்பதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. முன்கூட்டியே வீட்டுக் கடனை அடைப்பதில் உள்ள வழிமுறைகள், சிக்கல்கள் என்ன?
முதலில் வீட்டுக் கடன் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக அடைக்க முடியுமா என்றால், நிச்சயம் முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை முன்கூட்டியே வீட்டுக் கடனைச் செலுத்தினால் 2 சதவீத அபராதக் கட்டணத்தை வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் திட்டம் தொடங்கியபோது முன்கூட்டியே கடனை அடைக்கும் வழிமுறைகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. எனவே வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது. ஆனால், இது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியது. எனவே இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தலையிட்டு ரத்து செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பலன் கிடைத்தது. இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கிய ஏராளமானோர், கடனை முன்கூட்டியே அடைக்க ஆரம்பித்தனர். இப்போதெல்லாம் வீட்டுக் கடன் வாங்கிய நாளிலிருந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் ஏராளமானோர் வீட்டுக் கடனை முழுமையாக அடைத்து முடித்து விடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதாவது வீட்டுக் கடனை முழுமையாக முன்கூட்டியே செலுத்தும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. சிலரால் ஒரே சமயத்தில் முன்கூட்டியே முழுக் கடனையும் செலுத்த முடியாது. கையில் கொஞ்சம் தொகை இருக்கும். அதை வீட்டுக் கடனில் செலுத்திவிடலாமா என்று எண்ணுவார்கள். அப்படி அந்தத் தொகையைச் செலுத்தும்போது, அத்தொகை அசலிலிருந்து கழிக்கப்படுமா அல்லது வட்டியிலிருந்து கழிக்கப்படுமா என்பதில் பலருக்கும் குழப்பங்கள் இருக்கின்றன. இதுபற்றி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
“முன்கூட்டியே ஒரு தொகையைச் செலுத்தும்போது அசலிலிருந்து அந்தத் தொகையைக் கழிக்கமாட்டார்கள். அதேபோல வட்டியைக் கழிப்பதற்காகவும் பயன்படுத்தமாட்டார்கள். தொகை செலுத்தப்பட்ட பிறகு வரும் தவணைத் தொகையிலிருந்துதான் அதைக் கழிப்பார்கள். அதாவது ஒரே சமயத்தில் அசலும் குறையும். வட்டியும் குறையும். அதைவிட முக்கியமாகத் தவணைத் தொகை செலுத்தப்படுவதற்கான காலம் குறையும்” என்றார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஒரு வேளை வீட்டுக் கடன் வாங்கியவரால் முன்கூட்டியே பெருந்தொகையைச் செலுத்த முடியாமல் போகலாம். ஆனால், மாதந்தோறும் கூடுதலாகத் தவணைத் தொகையோடு சேர்த்து கூடுதலாக 2 அல்லது 3 ஆயிரம் ரூபாயைச் செலுத்த முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுபோலத் தொகையைச் செலுத்த முடியாது. தவணைத் தொகையைவிடக் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அந்தத் தொகையைச் செலுத்த முடியும். உதாரணமாக 3 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகை என்று வைத்துக்கொள்வோம். ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் தவணைத் தொகையைவிடக் குறைவாக இருக்கிறது அல்லவா? எனவே இந்த முறையில் தவணைத் தொகையுடன் கூடுதல் தொகையைச் செலுத்த முடியாது. அதற்குக் காராணம் இல்லாமல் இல்லை.
“வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை சூத்திரத்தின்படிதான் முடிவு செய்யப்படுகிறது. மாதந்தோறும் ஒரு தொகையைச் செலுத்துவதென்றால் சூத்திரமே அடிபட்டுபோகும். எந்த வங்கியும் சூத்திரத்தை மாற்றிக் கூடுதலாக வசூலிக்கமாட்டார்கள். தவணைத் தொகை செலுத்துவதை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் செலுத்தப்படும் தவணைத் தொகையில் வட்டிக்காகக் கூடுதல் தொகையை எடுப்பார்கள். அசல் தொகையைக் குறைவாகவே எடுப்பார்கள். மத்தியில் அசலுக்கும் வட்டிக்கும் சரிசமமாகத் தவணைத் தொகையை எடுத்துக்கொள்வார்கள். பிற்பகுதியில் அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்குக் குறைவாகவும் தவணைத் தொகையை எடுத்துக்கொள்வார்கள். எல்லா வங்கிகளிலும் இதுதான் நடைமுறை. உலகம் முழுவதும் இப்படித்தான் தவணைத் தொகை வசூலிக்கப்படுகிறது” என்றார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அதேசமயம் மாதந்தோறும் சிறிய தொகையைச் சேர்த்து வைத்து ஒரு நல்ல தொகையை வங்கியில் செலுத்த முடியும். பெரும்பாலும் குறைந்தபட்சம் 3 தவணைத் தொகைகளையாவது சேர்த்தால்தான் வங்கிகளில் முன்கூட்டியே செலுத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Friday, 23 September 2016

ஜி.எஸ்.டி.,யால் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கான வரி...உயரும்?:

புதுடில்லி:நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், கட்டப்பட்டு வரும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வரி உயரும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அந்த குடியிருப்புகளின் விலை உயரக்கூடும் என தெரிகிறது.
நாடு முழுவதும், தற்போது, பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலங் களிலும் தனித் தனி வரி விதிப்பு முறைகள் உள்ளன. இதனால், ஒரு பொருளுக்கு பல்வேறு கட்டங்களில், வரிகள் விதிக்கப்படும் நிலை உள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை உள்ளது.

இதை மாற்றி, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யது. ஏற்கனவே, லோக்சபாவில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதா, நீண்ட இழுபறிக்கு பின், ராஜ்யசபாவிலும், சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.

பல்வேறு நடைமுறைகளுக்கு பின், இம் மசோதா, அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி அமலுக்கு வந்தால், சில பொருட்களை தவிர, அனைத்து பொருட்கள் மற்றும் சேவை களுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால், சில பொருட்களின் விலை உயரும்; சில பொருட்களின் விலை குறையும் நிலை உள்ளது.

ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்தால், அதன் எதிரொலி கட்டுமானத் துறையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு, புதிய வரி விதிப்பால் மாற்றம் ஏதும் இருக்காது. அதேசமயம், அடுக்கு மாடி குடியிருப்பு முன்பதிவு செய்து, கட்டப்பட்டு வருமேயானால், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வரி விதிக்கப்படும்.

இதனால், அதன் விலை, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை உயரக்கூடும் என தெரிகிறது.ஒருவர் தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்க பத்திர பதிவு முடிந்து, கட்டுமான பணிகள் நடந்து வந்தால், அது, பணிக்கான ஒப்பந்தமாக மட்டுமே கருதப்படுகிறது.

கட்டுமான பணிகளுக்கான சேவை வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, நிலம் தவிர கட்டுமான பணிகளுக்கான, 40 சதவீத தொகைக்கு மட்டும், 15 சதவீதம், சேவை வரி விதிக்கப்படுகிறது. இல்லையென்றால் ,ஒட்டுமொத்த தொகைக்கு கணிக்கிட்டு, 6 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

அதேசமயம், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டால், வீட்டின் ஒட்டுமொத்த தொகையும், சேவையின் கீழ் வரும். அதன்படி, வீட்டின் ஒட்டுமொத்த தொகைக்கும், ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படும். இதன் மூலம், கட்டுமானம் நடந்து வரும் வீடுகளின் விலை உயரக்கூடும் என ரியல் எஸ்டேட்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வரி ஆலோசனையாளர்கள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., வடிவமைப்பின் படி, நிலத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டுமான ஒப்பந்தம் ஆகிய இரண்டையும், தற்போது இருப்பதுபோல பிரித்து பார்க்க முடியாது. இவை ஒட்டுமொத்த சேவையாக பார்க்கப்படும். ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதம் என்றால், புதிய வீட்டுக்கான மொத்த வரி, 6 சதவீதமாக இருக்கும். அதுவே, ஜி.எஸ்.டி., வரியின் அளவு, 18 சதவீதமாக இருந்தால், புதிய வீட்டுக்கான மொத்த வரி, 12 சதவீதமாக உயர்ந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


ஜி.எஸ்.டி.,க்கு முன்பு...
* மொத்த சேவை வரி 6 சதவீதம்
* மாநில அரசின் வாட்: 0 - 1 சதவீதம்

ஜி.எஸ்.டி.,க்கு பிறகு...

* கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு வரியில் மாற்றம் இல்லை
* கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., வரும் வரை பழைய வரி; வந்த பின் மீதமுள்ள தொகைக்கு மட்டும் புதிய வரி
* ஜி.எஸ்.டி., வந்த பின் வீடுமுன்பதிவு செய்தால், மொத்த தொகைக்கும், ஜி.எஸ்.டி., வரியை பொறுத்து, வரி விதிப்பு இருக்கும்.

பத்திர பதிவு கட்டணம் உண்டு:


நிலத்தை பத்திர பதிவு செய்யும்போது, தற்போது இருப்பதை போல, பதிவு கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது; 5 முதல் 8 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இது, ஜி.எஸ்.டி., வரியின் கீழ் வராது. மாநில அரசு விதிக்கும் இந்த முத்திரை தாள் கட்டணத்தையும், வீடு வாங்குவோர் செலுத்தியாக வேண்டும்.  ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால், அடுக்குமாடி குடி யிருப்பு வீடுகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயரக்கூடும்
* கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., பொருந்தாது. இதனால், அந்த வீடுகளின் விலை உயர வாய்ப்பில்லை
* வீட்டிற்காக ஏற்கனவே பணம் செலுத்தி இருந்தால், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின்னர், செலுத்த வேண்டிய மீதித் தொகைக்கு மட்டும், வரி விதிக்கப்படும்.

அடுத்து என்ன?:

பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேறி யதைத் தொடர்ந்து, அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும், இந்த மசோதா ஒப்புதலுக்காக அனுப்பப்படும். 50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் அளித்த பின், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப் பட்டு, சட்ட விதிகள் உருவாக்கப்படும். 2017, ஏப்ரல், 1ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்திரை தாள் கட்டணம் வசூலிக்கப் படுவ தால், கட்டுமானத் துறையை, வழக்கமான, ஜி.எஸ்.டி., பிரிவின் கீழ் கணக்கிடக் கூடாது; இதனை தனியாக தான் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது உள்ள நடைமுறைப்படி, நில கட்டுமானம் உள்ளிட்டவற்றிக்கு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வீடுகளின் விலை உயராது.

கீதாம்பர் ஆனந்த் தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் தொழில் சங்க கூட்டமைப்பு

Thursday, 22 September 2016

வீட்டுக் கடனும் வட்டி வகைகளும்

வீடு கட்டுவதற்குப் பெரும்பாலானோர் நம்பியிருப்பது வங்கிக் கடனைத்தான். மேலும் மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகளும் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் நீண்ட கால அவகாசம்.
நாம் வாங்கும் கடனைப் பல மாதங்கள் தவணைகளாகத் திருப்பிச் செலுத்த முடியும். அதாவது வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த நீணட காலத் தவணைகள் இருந்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. அதாவது கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குள் இ.எம்.ஐ. (மாதத் தவணை) முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் பார்க்கும். ஒருவேளை ஓய்வுபெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்கும்பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும்.
அதாவது அவரது ஓய்வூதியம் இ.எம்.ஐ. செலுத்தப் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் கடன் அளிக்க வங்கிகள் முன்வரும். அதே சமயம் கடன் பெறுபவர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கும். நமது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை, உள்ளிட்ட அனைத்து வகைப் பிடித்தங்களும் போக, குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை வங்கிகள் உறுதிசெய்கின்றன.
வட்டி வகைகள்
இதற்குக் காரணம் தவணை செலுத்துவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சமயம் நம்மால் தவணையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகலாம்.
மேலும் வீட்டுக் கடனில் மூன்று வகையான வீட்டுக் கடன் வட்டிகள் உள்ளன. நிலையானது (Fixed), மாறுபடும் (Floating), கலவை (Mixed or Hybrid) ஆகியவைதான் அதன் வகைகள். கடன் வாங்கும்போது நிர்ணயிக்கப்படும் வட்டி, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு மாறாமல் இருப்பதே நிலையான வட்டி விகிதம். அதன் பிறகு கடன் சந்தையின் வட்டிக்கு ஏற்பக் கடனின் வட்டியும் மாறும்.
மாறுபடும் வட்டி என்றால், கடன் சந்தையின் வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மாறும். முழு காலத்துக்கும் ஒரே அளவில் தவணை இருக்காது. சிறிது கூடலாம், குறையலாம்.
வீட்டுக் கடனில் ஒரு பகுதி நிலையான வட்டி விகிதத்திலும், எஞ்சியவை மாறுபடும் வட்டி விகிதத்திலும் இருந்தால் அதுதான் கலவை வட்டி விகிதம். எந்த வட்டி விகிதத்தில் எவ்வளவு சதவிகிதம் இருக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இதில் உண்டு.
வழக்கமாக, மாறுபடும் வட்டி விகிதத்தைவிட நிலையான வட்டி விகிதம் 1 முதல் 2 சதவீதம் அதிகமாக இருக்கும். எனவே மாறுபடும் வட்டி விகிதமே லாபகரமானது. வட்டி விகிதம் உயரும்போது, குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை நிலையான வட்டி அதிகரிக்கும். நிலைமைக்குத் தகுந்தாற் போல வட்டியும் அதிகமாக வசூலிக்கப்படும்.
இது சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்கள் கலவை வட்டி விகிதத்தைத் தேர்வு செய்யலாம். நடைமுறையில் வீட்டுக் கடன் வாங்குவோரில் சுமார் 85 சதவீதம் பேர், மாறுபடும் வட்டி விகிதத்தைத்தான் தேர்வு செய்கிறார்கள் என்கிறார் வங்கியாளர் ஒருவர். ஒருவேளை நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்தால், அதன் பிறகு வட்டி விகிதம் குறைந்து மாறுபடும். வட்டி விகிதமும் குறைந்தால், நிலையான வட்டியில் இருந்து மாறுபடும் வட்டிக்கு மாறுவது பலன் அளிக்கும். வட்டி விகிதம் எதிர்காலத்தில் மிகவும் அதிகரிப்பது போன்ற சூழ்நிலை இருந்தால், அப்போது மாறுபடும் வட்டியில் இருந்து நிலையான வட்டிக்கு மாறுவதும் லாபமாக இருக்கும். இப்படி மாறுவதற்கு, பாக்கி உள்ள கடன் தொகையில் 1 முதல் 2 சதவீதம் அளவுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்போது கடனுக்கான வட்டி விகிதமும் பொதுவாக அதிகரிக்கும். இதை வைத்து வட்டி விகிதத்தைத் தேர்வு செய்யலாம். பண வீக்க விகிதம் அதிகமாக இருந்தால், நிலையான வட்டியையும், குறைவாக இருந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தையும் தேர்வு செய்வதே நல்லது.


Wednesday, 21 September 2016

கட்டிட விரிசல் கட்டுநர் பொறுப்பா?



கடந்த சில பத்தாண்டுகளாக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. இன்னும் பல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரத்தில் எல்லோருக்கும் வீடு என்பது இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டால்தான் சாத்தியம். இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் வளர்ந்த அளவு அது தொடர்பான பிரச்சினைகளும் பெருகியுள்ளன. உதாரணமாக வீட்டைச் சொன்ன காலத்துக்குள் கட்டிக் கொடுக்காமல் கட்டுநர்கள் இழுத்தபடிப்பதுண்டு.
மேலும் அவசரம் அவசரமாகத் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வீடுகளைக் கட்டித் தருவதும் நடக்கிறது.
புது வீட்டுக்குப் போன பிறகுதான் இந்தக் கட்டுமானக் குறைபாடு தெரிய வரும். வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டால், அதற்கு மழை, வெயில் என இயற்கையைக் காரணமாக இருக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது. வீட்டு உட்புறச் சுவர்களில் கீறல்கள் விழுந்தால் அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். அது தரமற்றக் கட்டுமானப் பொருள்களால் வந்ததாக இருக்கலாம். இதைச் சேவை குறைபாடு என்று வகைப்படுத்தலாம். தரமான வீட்டைக் கட்டிக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு அதன்படி நடக்கவில்லை என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஆனால் நீதி மன்றத்தில் தரமற்ற கட்டுமானப் பொருளால்தான் வீட்டில் விரிசல் விட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். அப்படி நிரூபிக்கும்பட்சத்தில் உரிய இழப்பீடு நமக்குக் கிடைக்கும். 

Thanks to Tamil Hindu, 10-09-2016

Tuesday, 20 September 2016

உங்களிடம் இருக்கிறதா உட்பிரிவு பட்டா?

இப்போதெல்லாம் ஒரு கிரவுண்டு மனையில் 4 முதல் 6 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி விடுகிறார்கள். இப்படி கட்டி விற்கப்படும் வீடுகளும் விரைவாக விற்பனையும் ஆகிவிடுகின்றன. அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். 4 அல்லது 6 வீட்டு உரிமையாளர்களும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவு பட்டா வாங்க மறந்துவிடுகிறார்கள். தனியாகப் பட்டா வாங்காவிட்டால் என்னவாகும்?
அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப்பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்கு பட்டா வாங்க வேண்டும். அதாவது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடி வீட்டில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவு பட்டா வாங்குவது மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடம் இருக்கும். ஒரு வேளை உட்பிரிவு பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால் பிற்காலத்தில் சிக்கல்கள் வரலாம்.
நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்குப் பட்டாவையும் அரசு வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த பட்டா ஒருவருக்கு இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும். பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். நாம் உட்பிரிவு பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கோரலாம். பட்டாவைக் காட்டி இன்னொருவருக்கு சொத்தை விற்பனைக்கூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அந்தச் சொத்துப் பத்திரப் பதிவு மூலம் உங்களுக்குரியது என்பதை மறைத்து சொத்தை விற்கலாம். வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவு பட்டா இல்லை என்றால் சிக்கல் எழும். உட்பிரிவு பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடும். அடுக்குமாடி வாங்கியவர்கள் உட்பிரிவு பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டாவை அளிக்கும். உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 35/1 என்று வைத்துக்கொள்வோம். 6 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 35/1ஏ, 35/1பி, 35/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவு பட்டா வழங்குவார்கள். குறிப்பிட்ட மனை 6 பேருக்கும் சொந்தமாக இருக்கும்.
இதேபோல ஒரு மனையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், அது இரண்டாகப் பிரிக்கப்படும். மேற்சொன்னப்படி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவார்கள். அதோடு குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைப்படத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த்துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள். இதன்மூலம் உங்களுடைய சொத்து முழுமையாக உங்களுடையதாகும்.
பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமைக் கொண்டாட முடியாத நிலை உருவாக்கப்படும். எனவே இதுவரை பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த உட்பிரிவு பட்டா என்பது அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல. மனைகளுக்கும் மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக்கூடியது.
சொத்துக்குப் பத்திரமும் பட்டாவும் இரு கண்கள் போல. ஒன்று இல்லாவிட்டாலும் சிக்கல்தான்! 

Source:
The Tamil Hindu Daily 17-09-2016

Saturday, 14 May 2016

Annual General Body Meeting 2016



Notice of the 1st Annual General Body Meeting
Dear Members,
Notice is hereby given to all the members that the 1st Annual General Body Meeting (AGM) of Our Association will be held on 19th June 2016, at 5.00 pm at our premises to conduct the following businesses:
Agenda
1. Welcome and Remarks by the Vice President.
2. Secretary’s Annual Report.
3. Presentation of Annual Statement of Accounts by the Treasurer.
4. Following Specific Issues.
    a) Change in Office Bearers, If any
    b) Change in the Executive Committee Members, If any
    c) Fixing of Maintenance Charges
 5. Any other matter with permission of the Chair.
6.   Vote of Thanks                                                                                    
Note: If there is no quorum till 5.00 pm, the meeting shall be adjourned for another 30 minutes.  Following that, the meeting will be held and conducted whether there is quorum or not.
Only members of the association are eligible to attend and participate in the meeting according to the bye laws of the society. No proxy attendance or voting will be allowed. 
By order of the Managing Committee “Sri Seshadri Brindavan Apartment Owners and Residents Association”                                     
                                                                                                   Haran Duraisamy   
                                                                                                     Secretary